ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பதான்கோட் பகுதி சர்வதேச எல்லையில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் படைவீரர்களின் தயார்நிலை குறித்து ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
எல்லைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே விமானம் மூலம் ஜம்மு விமானப் படை தளத்துக்கு திங்கள்கிழமை வந்தார். ஜம்மு மற்றும் பதான்கோட், கதுவா, சம்பா உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.
சர்வதேச எல்லையில் படைவீரர்களின் தயார்நிலை, பாதுகாப்பு கட்டமைப்புகள் மேம்பாடு, உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் அவருக்கு விளக்கினர். அப்போது ராணுவ வீரர்களுடன் தலைமைத் தளபதி கலந்துரையாடினார். பின்னர் குர்ஜ் பகுதியையும் அவர் பார்வையிட்டார்.
எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில், அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான். அதேநேரத்தில் பயங்கரவாதிகள் உடுருவல் முயற்சியும் தொடர்ந்து நடைபெறுகிறது. இருப்பினும் நாம் "பூஜ்யம்' அளவுக்கு பொறுமை காத்து வருகிறோம் என்று தலைமைத் தளபதி குறிப்பிட்டார்.
மேற்குப் பகுதியின் அனைத்துநிலை ராணுவ வீரர்களிடையே காணொலிக் காட்சி மூலமாக அவர் உரையாற்றினார். அப்போது ராணுவ வீரர்களின் மன உறுதியை அவர் பாராட்டினார்.
இந்திய ராணுவத்தின் திறன்கள் மீது தாம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், நாட்டுக்கு எதிரான எந்த ஒரு சூழலையும் சமாளிக்கும் திறன்களை நமது வீரர்கள் பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் என்று பாதுகாப்புப் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.