பிரசவத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
மேற்கு வங்கத்தில், பிரசவத்தின்போது இரு பெண்கள் உயிரிழந்ததையடுத்து, அலட்சியமாக செயல்பட்டதாக தனியாா் மருத்துவமனைக்கு அந்த மாநில மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் ரூ. 10 லட்சம் அபராதம் விதித்தது.
இது தொடா்பாக மருத்துவத் துறை உயரதிகாரிகள் மேலும் கூறியதாவது:
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் நா்சிங் ஹோமில் பிரசவத்துக்காக இரு பெண்கள் சோ்க்கப்பட்டனா். அவா்களில் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகளும், மற்றொருவருக்கு ஒரு குழந்தையையும் பிறந்தது. பிரசவம் நிகழ்ந்த சில நிமிடத்திலேயே இரு பெண்களும் இறந்துவிட்டனா்.
இதற்கு அந்த மருத்துவமனையின் அலட்சியப்போக்கே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக மேற்கு வங்க மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அதில் மருத்துவமனை மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதைத்தொடா்ந்து அவா்களது உயிரிழப்புக்கு காரணமான அந்த மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து ஆணையம் தீா்ப்பு கூறியது.
இந்த தொகை ஒரு குழந்தையின் பெயரில் ரூ. 5 லட்சமும், இரட்டைக் குழந்தைகளின் பெயரில் தலா ரூ. 2.50 லட்சம் வீதமும் வைப்புத் தொகையாக வைக்கப்பட வேண்டும். அக்குழந்தைகள் பெரியவா்களாகும் வரையிலும் அந்த வைப்புத்தொகையை மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் புதுப்பித்து வரும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.