பிகாரில் ஆளுநர் மாளிகையில் 20 ஊழியர்களுக்கு கரோனா
பிகாரில் ஆளுநர் மாளிகையில் 20 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பிகார் மாநிலத்தில் கரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து அங்கு இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு 19, 284 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை 174 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 6261 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,849 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். இந்த நிலையில் பிகாரில் ஆளுநர் மாளிகையில் 20 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து ஆளுநர் மாளிகை இல்லத்தில், கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. முன்னதாக, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் சஞ்சய் ஜெஷ்வால், அவரது மனைவி மற்றும் தாய்க்கு அண்மையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.