புது தில்லி: வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அசாம் மாநிலத்துடன் ஒட்டுமொத்த தேசமும் உள்ளது என்று கூறியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த பேரிடரில் இருந்து நிச்சயம் அசாம் மக்கள் மீண்டு எழுவார்கள் என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சுமார் 28 மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில், ஒட்டுமொத்த தேசமும் அசாம் பக்கம் நிற்கிறது.
இந்த பேரிடர் காலத்தில் இருந்து அசாம் மக்கள் இயற்கையாகவே தங்களுக்கு அமைந்திருக்கும் தன்னம்பிக்கையோடு மீண்டு எழுந்து வருவார்கள். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறும் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியனோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.