சென்னை: கோவை சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழில் டிவீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது.
No amount of hate can ever deface a giant." என்று பதிவிட்டுள்ளார்.
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் காவி பெயிண்ட்டை ஊற்றி சென்றுள்ளனர். இதனை நேற்று காலை 5.30 மணியளவில் கண்ட பெரியார் அமைப்பினர் மற்றும் திமுகவினர் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து வந்த குனியமுத்தூர் காவலர்கள் தண்ணீர் ஊற்றி பெயிண்டுகளை அகற்றினர். இந்நிலையில், பெரியார் சிலை மீது பெயிண்ட்டை ஊற்றிச் சென்ற மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி திமுக, மற்றும் பெரியார் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல்நிலையித்தில் சரணடைந்தார். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.