மேற்கு வங்கத்தில் ஒரு சில பகுதிகளில் கரோனா சமூகப் பரவல் இருப்பதால் மாநிலம் முழுவதும் வாரத்துக்கு இரு நாள்கள் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கரோனா பரவல் அதிகமுள்ள இடங்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் அலபன் பாண்டியோபத்யாய் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வாரத்தில் இரு நாள்கள் அனைத்து அலுவலகங்களும் மூடப்படும் என்றும் போக்குவரத்து சேவைகளும் முடக்கப்படும் என்றும் கூறினார். இந்த வாரம், முழு பொது முடக்கம் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைமுறையில் இருக்கும். அடுத்த வாரம், புதன்கிழமை (ஜூலை 29) பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று கூறினார்.
மேலும் இதுகுறித்து வருகிற திங்கட்கிழமை நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் கூறினார்.