கடந்த சில நாள்களாகவே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆளும் பாஜக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். சீனா மற்றும் எல்லை விவகாரம், பொருளாதாரம், கரோனா தொற்று என பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மத்திய அரசின் தற்சார்பு கொள்கை குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் ராகுல் காந்தி, இந்தியாவின் அடிப்படைத் தேவைகளை மத்திய அரசு மாற்றியமைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்கலாம்.. சென்னையில் 81% கரோனா நோயாளிகள் குணமடைந்தனர்
கரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசின் சாதனைகள் என்று ஹிந்தியில் ஒரு பட்டியலை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அதாவது, கரோனா தொற்று பரவி வரும் நிலையில், பாஜக தலைமையிலான அரசு செய்த சில விஷயங்களை ராகுல் பட்டியலிட்டுள்ளார்.
பிப்ரவரியில், நமஸ்தே டிரம்ப் (டிரம்பின் இந்திய வருகை)
மார்ச் மாதம் - மத்தியப் பிரதேச அரசு கவிழ்ப்பு
ஏப்ரல் மாதத்தில் - மெழுகுவர்த்தி ஏந்தியது
மே மாதம் - மோடி அரசின் ஆறாம் ஆண்டு விழா
ஜூன் மாதம் - பிகாரில் காணொலி மூலம் பொதுக்கூட்டம்
ஜூலையில் - ராஜஸ்தான் அரசை கவிழ்க்க சதி
என்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகத்தான் கரோனாவுக்கு எதிரான போரில் நாடு தற்சார்பு அடைந்து வருகிறது என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.