ஆந்திரத்தில் தலித் இளைஞரின் தலையைக் காவல் துறை அதிகாரிகள் மொட்டையடித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் அந்தப் பகுதியில் வாகனம் ஒன்றின் கண்ணாடியைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து உடைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணைக்காக ராஜமுந்திரியில் உள்ள சீதனகரம் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்.
அப்போது பணியில் இருந்த ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட அவருக்குத் தலையை மொட்டையடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
விசாரணைக்காக வந்தவரைக் காவலர்கள் தாக்கிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மாவட்ட காவல் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், இதுதொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வன்கொடுமைத் தடுப்புத் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
ஆந்திரத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவரைக் காவல் அதிகாரிகள் தாக்கிய இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.