கேரளத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது பற்றி முடிவு செய்ய வரும் திங்கள்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
கேரளத்தில் ஜூலை 27-ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடவிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ரத்து செய்வதாக கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முடிவு செய்யப்பட்டது.
மேலும், மாநிலத்தில் பொது முடக்கத்தை அமல்படுத்தப்படுவது பற்றி முடிவெடுக்க வரும் திங்கள்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்த முடிவும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமீப நாள்களாக பாதிப்புக்குள்ளாவோரில், குறிப்பிடத்தக்க சிலருக்கு எவ்வாறு கரோனா தொற்று ஏற்பட்டது என்பது கண்டறிய முடியவில்லை. இதன் காரணமாக, கேரளத்தில் சில பகுதிகளில் சமூகப் பரவல் ஏற்பட்டிருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், நேற்று முதன்முறையாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அங்கு ஆயிரத்தைத் தாண்டியது. இதைத் தொடர்ந்து, கேரளத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார்.