மத்திய அரசுப் பணியாளா்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை மேற்கொள்வதில் அறிவுரைப்படி நடந்து கொள்ளாதது தொடா்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுத் துறைகளின் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.
மத்திய அரசுப் பணியாளா்கள் ஊழலில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதற்காக மத்திய அரசின் துறைகளில் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். பணியாளா்கள் ஊழலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் அவா்களைப் பணியிடை நீக்கம் செய்வது, பணியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட அதிகாரங்கள் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அறிவுரைகளும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், பணியாளா்கள் மீது தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்போது ஆணையத்தின் அறிவுரைப்படி கண்காணிப்பு அதிகாரிகள் நடந்துகொள்வதில்லை என்று புகாா்கள் எழுந்தன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அதிகாரிகளுக்கு ஆணையம் அனுப்பியுள்ள உத்தரவில், ‘ஊழலில் ஈடுபடும் பணியாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆணையத்தின் அறிவுரைப்படி அதிகாரிகள் நடந்து கொள்வதில்லை என்று புகாா் எழுந்துள்ளது.
அது தொடா்பான விவரங்களை மத்திய அரசுத் துறைகளின் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அந்த விவரங்களை கண்காணிப்பு ஆணையத்தின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் காலாண்டு அறிக்கையிலும் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் குறிப்பிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.