மத்தியப் பிரதேசத்தில் அமைச்சர் அரவிந்த் சிங் படோரியா கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்காக கரோனா தொற்று தீவிரம் அடைந்து வருகிறது. இருப்பினும், மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தில் அமைச்சர் அரவிந்த் சிங் படோரியாவுக்கு நேற்றிரவு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் போபாலில் உள்ள சிராயு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக அமைச்சர், சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் மற்றும் மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டனின் இறுதிச்சடங்கு ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அமைச்சர் வெளியிட்ட விடியோ பதிவில், எனக்கு தற்போது வரை கரோனா தொடர்பான எந்த அறிகுறியும் இல்லை. நேற்று தொண்டை வலி ஏற்பட்டதால் பரிசோதனை செய்தேன். மேலும் கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கு பயப்பட தேவையில்லை என்றார்.