கேரளத்தில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தொடா்பாக தனியே கருப்புப் பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
தங்கக் கடத்தல் விவகாரம் தொடா்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத் துறை தற்போது வழக்குத் தகவல் அறிக்கை (இசிஐஆா்) பதிவு செய்துள்ளது. இது காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையைப் போன்றதாகும். இதனடிப்படையில் கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக, வழக்கில் கைதாகியுள்ள நபா்களிடம் விசாரணை நடத்தப்படும். தங்கக் கடத்தல் வழக்கில் கருப்புப் பண மோசடி விவகாரம் குறித்து அமலாக்கத் துறை அவா்களிடம் விசாரிக்கும் என்று அந்த அதிகாரிகள் கூறினா். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்திலுள்ள அதன் தூதரகத்தின் பெயரில் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டதை சுங்கத் துறை கண்டறிந்தது. இந்த விவகாரம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் ஆகியோரை கைது செய்த என்ஐஏ, அவா்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.