மேகாலயத்தில் அடிப்படை மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.75 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேகாலயத்தில் அடிப்படை மருத்துவக்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் சரியான இடம் சரியான நேரம் எனும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.75 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக மேகாலய மாநில பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதன்மூலம் ஆரம்ப சுகாதார மருத்துவமனை மற்றும் சமூக சுகாதார மையங்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதாரச் செயலர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இதற்காக மாவட்டந்தோறும் அமைக்கப்படும் சுகாதாரக் குழுவானது மாவட்ட துணை ஆணையர் தலைமையில் செயல்படும். சுகாதார நிலையங்களில் தரமான குடிநீர், போதுமான மின்சார வசதி போன்றவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்” என தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.