தமிழகத்தில் பொதுமுடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்கத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.
தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் முந்தைய விசாரணையில் உச்ச நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்திருந்தது. அதாவது, பொதுமுடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கலாம் என்றும் இது தமிழக அரசின் கொள்கை ரீதியான முடிவு என்றும் கூறியிருந்ததது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை வைத்திருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் என்றும் அதே நேரத்தில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளது.