திருவனந்தபுரம்: கேரளத்தில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசு, அலிபாபாவும் நாற்பது திருடர்களையும் போல செயல்படுவதாக காங்கிரஸ் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது.
செய்தியாளர்களிடம் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, கேரள மாநிலம் இதுவரை இதுபோன்ற மிக மோசமான ஆட்சியையும், ஊழல் மிகுந்த முதல்வரையும் பார்த்ததே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் பினராயி விஜயன், இதுவரை கண்டிராத ஊழலை செய்துள்ளார்.
மிக உயர்ந்த ஊதியம் பெறும் உயர் பதவிகளுக்கு பின்கதவு வழியாக பணிநியமனங்களும் நடைபெற்றுள்ளன. உடனடியாக முதல்வர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த அரசு கிட்டத்தட்ட அலிபாபாவும் நாற்பது திருடர்களையும் பேலால உள்ளது என்று சென்னிதலா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலேயே கேரள மாநிலம் தற்போது அவமானகரமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. ஒரு முதல்வரின் செயலாளர், மூத்த ஐஏஎஸ் அதிகாரியே, என்ஐஏ சோதனையின் கீழ் உள்ளார் என்றால், எவ்வாறு முதல்வர் தனது பதவியைத் தொடர முடியும் என்றும் சென்னிதலா கேள்வி எழுப்பியுள்ளார்.