மகாராஷ்டிரத்தில் ரயில்வே தண்டவாளத்தில் தவறிவிழுந்த பயணியை அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
58 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயில் நிலையத்திற்குள் ரயில் வந்து கொண்டிருந்த போது ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார்.
அப்போது நிலைதடுமாறிய அந்த நபர் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையேயான இடைவெளியில் விழுந்தார். இதனைக் கண்ட பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு அவரை மீட்டார்.
இதனால் நொடிப் பொழுதில் நடைபெற இருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.விபத்தில் இருந்து தப்பிய நபருக்கு, பின் ஆலோசனை வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். உடனடியாக செயல்பட்டு ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப்படை வீரருக்கு அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.