திரைக்கலைஞர் சுசாந்த் சிங்கின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவது கேட்டுக் கொண்டுள்ளார்.
பாலிவுட் திரை உலகின் பிரபல திரைக்கலைஞர் சுசாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலை திரைத்துறையினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சுசாந்த் சிங்கின் மரணம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். வியாழன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, “பீகார் வம்சாவளியைச் சேர்ந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான வழக்கு ஒவ்வொரு நாளும் வெளிவருகிறது. இப்போது இந்த வழக்கை மகாராஷ்டிரா மற்றும் பீகார் காவல்துறைக்கு பதிலாக சிபிஐ விசாரித்தால் உணமைகள் வெளிவரும்." எனத் தெரிவித்துள்ளார்.
இறந்த நடிகரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் 6 பேருக்கு எதிராக ஜூலை 25 ம் தேதி இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாயாவதி மேலும் கூறுகையில், "சுஷாந்த் ராஜ்புத் சம்பவத்தில் மகாராஷ்டிரா மற்றும் பீகார் காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த மாறுபட்ட நிலைப்பாடு அவர்களின் அரசியல் நலன்களுக்கானது எனத் தெரிகிறது. மகாராஷ்டிரா அரசாங்கம் சுசாந்த் சிங்கின் வழக்கில் தீவிரமாக இருக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.