கரோனாவுக்கு எதிராக பல மாநிலங்களை விட சத்தீஸ்கர் சிறப்பாக செயல்படுகிறது என்று அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கணொலி மூலம் பொதுமக்களுக்கு உரையாற்றிய அவர், "சத்தீஸ்கர் பல மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்ட போதிலும், மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாததே வைரஸ் பரவலுக்கு காரணம். மாநிலத்தில் கரோனா இறப்பு விகிதத்தை விட குணமடைந்தோர் விகிதம் நன்றாக உள்ளது.
தற்போதைக்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பரிசோதனைகளை நடத்தி வருகிறோம். விரைவில் இந்த எண்ணிக்கையை 10ஆயிரமாக உயர்த்துவதே எங்கள் இலக்கு. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கரோனா பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். மேலும பக்ரித் மற்றும் ரக்ஷாபந்தன் ஆகியவற்றை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடி கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கரில் கரோனாவால் இதுவரை 8,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,914 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 5,636 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் அங்கு கரோனாவுக்கு இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர்.