புது தில்லி: இந்திய எல்லைப் பகுதிக்கு அருகே பாகிஸ்தான் 27 பயங்கரவாத முகாம்களை செயல்படுத்தி, அதில் 320 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் எந்த நேரத்திலும் ஊடுருவத் தயார் நிலையில் இருப்பதாக புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, எல்லைப் பகுதியில் ஊடுருவல் முயற்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதக் குழுக்களிடையே நடந்த பல்வேறு தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு முக்கிய விவரங்களை சேகரித்திருக்கும் புலனாய்வுத் துறை அளித்த எச்சரிக்கையை அடிப்படையாக வைத்து, இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த ஆண்டில் ஊடுருவல் முயற்சிகள் குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு வெறும் 35 பயங்கரவாதிகள் மட்டும் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்துள்ளனர். கடந்த ஆண்டு இதுவே 60 ஆக இருந்தது. 2020ன் முதல் அரையாண்டில் எல்லைப் பகுதியில் 429 முறை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும், கடந்த ஆண்டு இதேக் காலக்கட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் 605 ஆக இருந்ததாகவும் கூறப்படுகிறது.