கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தில்லியில் வாரச் சந்தைகளுக்கு அனுமதி அளிப்பதாக தில்லி முதல்வர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், தேசிய தலைநகர் தில்லியில் ஒரு வார காலத்துக்கு பரிசோதனை முயற்சியாக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சாலையோர வணிகர்களுக்கும் அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது சீராக நடைபெற்று பாதிப்பு ஏதும் ஏற்படாத பட்சத்தில், சாலையோரக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை தளர்த்துவது குறித்தும் முடிவு செய்யப்படும்.
புது தில்லியில் பொருளாதார நிலைமையை சீராக்கும் வகையில் பல்வேறு தளர்வுகளை அறிவிக்கும் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எடுத்து வருகிறார்.
ஏற்கனவே, வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கும், வேலை தேடுவோருக்கும் உதவும் வகையில் ஒரு இணையதளத்தை துவக்கி வைத்தார். மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டிருந்த விடுதிகளை விடுவித்து நடவடிக்கை எடுத்தார்.