உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிப்புக்குள்ளானோரில் 27 சதவீதத்தினர் மாநிலம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மார்ச் 1-ஆம் தேதி முதல் இன்றைய தேதி வரை சுமார் 30 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசம் திரும்பியுள்ளனர்.
அந்த மாநிலத்தில் கரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,105. இதில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,165. கரோனா நோய்த் தொற்றுக்கான அந்த மாநில சிறப்பு அலுவலர் தெரிவிக்கையில், "இதுவரை 69,000 புலம்பெயர் தொழிலாளர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதில் ஞாயிற்றுக்கிழமை வரை 2,165 தொழிலாளர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.