பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகே சுவாமி விவேகானந்தருக்கு 120 அடி உயர சிலையொன்றை நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக, மாநில வீட்டு வசதித் துறை அமைச்சர் சோமண்ணா தெரவித்துள்ளார்.
இதுதொடர்பாக திங்களன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகேயுள்ள முத்யாலயா மடுவி நீர்வீழ்ச்சிக்கு அருகே சுவாமி விவேகானந்தருக்கு 120 அடி உயர சிலையொன்றை நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளது. குஜராத் மாநிலம் கேவடியாவில் சர்தார் சரோவர் அணைக்கட்டிற்கு அருகே நிறுவப்பட்டுள்ள வல்லபாய் படேலின் சிலையைப் போன்று, நீர்நிலைக்கு அருகே ஒரு சிலை என்ற அடிப்படையில் இதனை உருவாகத் திட்டமிட்டுள்ளோம்.
மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ள இந்த சிலை அமையவுள்ள இடமானது, பன்னர் கட்டா தேசியப் பூங்காவில் இருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும்.
இதுதொடர்பான முறையான தகவல்களுடன் கூடிய திட்ட அறிக்கையானது 15 நாட்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.