உத்தரகண்ட் அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, தலைமைச் செயலக கட்டடத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் சத்பால் மகாராஜ், அவரது மனைவி, இரு மகன்கள், மருமகள்கள் உள்பட 23 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, அமைச்சா் சத்பால் மகாராஜ், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், அமைச்சர்கள் ஹராக் சிங் ராவத், மதன் கௌசிக், சுபோத் உனியால் ஆகிய நால்வரும் சில நாள்களுக்குத் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர். மேலும், நால்வருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து, தலைமைச் செயலக கட்டடத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் இன்று முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சுற்றுலா மற்றும் நீர்ப்பாசனத் துறையின் பிரிவுகளும் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் அங்கு சுகாதாரப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான மதன் கவுசிக் தெரிவித்தார்.
மேலும், கரோனா உறுதி செய்யப்பட்ட அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அறிகுறிகள் இல்லாத காரணத்தால் அவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தியிருந்தது. பின்னர் அமைச்சர் வலியுறுத்தவே, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கு பிறகு அமைச்சர் உள்பட அனைவரும் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.