தேசிய தலைநகர் தில்லியின் ஆனந்த் பர்பத் பகுதியைச் சேர்ந்த 5 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. இதில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்தவகையில், தலைநகர் தில்லியில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இரண்டு காவலர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மூன்று காவலர்கள் பலியாகியுள்ளனர்.
தில்லியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை மொத்தம் 20,834 ஆகப் பதிவாகியுள்ளன. அவற்றில் 8,746 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 523 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.