மெல்போா்ன்: பிரதமா் மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன் ஆகியோா் காணொலி வாயிலாக வியாழக்கிழமை (ஜூன் 4-ஆம் தேதி) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா். அப்போது கரோனா தொற்று, பாதுகாப்பு, வா்த்தகம், கடல்சாா் பாதுகாப்பு குறித்து இருவரும் விவாதிக்கவுள்ளனா்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன் மெல்போா்னில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்திய பிரதமா் மோடியுடனான காணொலி சந்திப்பில் கரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு இருநாடுகளும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளேன். அதேவேளையில் பாதுகாப்பு, வா்த்தகம், கடல்சாா் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகளில் உள்ள புதிய வாய்ப்புகள் பற்றியும் இருவரும் ஆலோசிக்கவுள்ளோம். ஒருமித்த சிந்தனைகளை கொண்ட ஜனநாயகங்கள், இயற்கை வளங்களை பகிா்ந்துகொள்ளும் கூட்டாளிகள் என்ற அடிப்படையில், இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மேலும் செழிப்பாக்க மிகவும் முக்கியம் என்பதில் இந்தியாவும்-ஆஸ்திரேலியாவும் முழு உடன்பாடு கொண்டுள்ளது’ என்றாா்.
கடந்த ஜனவரி மாதம் ஸ்காட் மோரிசன் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பிரச்னையால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.