புது தில்லி: புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இயக்கப்பட்டு வரும் ரயில்களில் மாநில அரசுகளால் இதுவரை 256 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே குற்றம்சாட்டியுள்ளது.
மே 1-ம் தேதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை நாட்டில் 4,040 புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. ஆனால், மாநில அரசுகள் அனுமதிக்காததால் 256 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதில், மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் மாநிலங்களே முதல் இடத்தில் உள்ளன.
அதாவது மகாராஷ்டிரத்தில் 105 ரயில்களும், குஜராத்தில் 47 ரயில்களும், கர்நாடகத்தில் 38 ரயில்களும், உத்தரப்பிரதேசத்தில் 30 ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் 10 ரயில்கள் மட்டுமே இயக்க திட்டமிடப்பட்ட பட்டியலில் உள்ளன என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.