புது தில்லி: நாட்டில் அத்தியாவசியப் பொருள்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் நலனுக்காக ஒரே நாடு ஒரே சந்தையை ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசியப் பொருள்களுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் பணிகள் எளிமையாக்கப்படும் என்று கூறினார்.
மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா துறைமுகம், ஷியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.