வழக்கமான அறுவை சிகிச்சைகளைப் போல அல்லாமல் அஸ்ஸாமில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவரின் வயிற்றில் இருந்து செல்லிடப்பேசி சார்ஜரை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
30 வயதாகும் அந்த நோயாளியின் வயிற்றில் இருந்து சுமார் 2 அடி நீளமுள்ள ஒயரை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
இது குறித்து குவகாத்தி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வலியுல் இஸ்லாம் கூறுகையில், நோயாளி கடும் வயிற்று வலியோடு மருத்துவமனைக்கு வந்தார். தவறுதலாக செல்லிடப்பேசி ஒயரை விழுங்கிவிட்டதாகக் கூறியுள்ளார். அவரை பரிசோதித்த போது செல்லிடப்பேசி வொயர் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை. அறுவை சிகிச்சை செய்து பார்த்த போதும், வயிற்றுப் பகுதிக்குள் ஒயர் இல்லை. உடனடியாக அவருக்கு எக்ஸ்-ரே செய்து பார்த்த போது, அவரது சிறுநீரகப் பையில் நுழைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக செல்லிடப்பேசி வொயர் நீக்கப்பட்டுவிட்டது. அவர் தற்போது குணமடைந்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர் இந்த ஒயரை வாய் வழியாக விழுங்கவில்லை என்றும், பாலியல் அழுத்தத்தால் ஆணுறுப்பு வழியாக உள்ளே தள்ளியிருக்கலாம் என்றும், நோயாளியோ அதனை வாய் வழியாக விழுங்கியதாக பொய் சொன்னதால், வொயரைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒயர் வயிற்றுக்குள் சென்று சுமார் ஒரு வார காலத்துக்குப் பிறகே பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையை அணுகியிருப்பதையும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.