மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2020-21ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும், தேர்வு நடைபெறும் புதிய தேதி குறித்து ஜூன் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
அதன்படி, சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் முதன்மைத் தேர்வு 2021 ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யுபிஎஸ்சி நடத்தும் பல்வேறு தேர்வுகளின் தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வனத்துறை அதிகாரிகள் பதவிக்கான ஐ.எப்.எஸ் முதன்மைத் தேர்வு பிப்ரவரி 28 முதல் நடைபெறும்.
என்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வுக்கு ஜூன் 10 முதல் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வானது அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.