தெற்கு காஷ்மீரின், இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கான புனித யாத்திரை இந்தாண்டு ஜூலை 21-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரை செல்கின்றனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அமார்நாத் யாத்திரை தாமதமாகியுள்ளதோடு, யாத்திரைக்கான கால அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 21-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சாதுக்களைத் தவிர, 55 வயதுக்குக் குறைவான அனைத்து யாத்ரீகளும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அமர்நாத் கோயிலுக்கு வரும் யாத்ரீகள் அனைவருக்கும் எல்லையிலேயே கரோனா பரிசோதனை செய்யப்படுவார்கள். வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே குகைக் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தாண்டு யாத்திரை வடக்கு காஷ்மீர் பால்டால் பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பஹல்காம் பாதை வழியாக யாத்திரை செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரக்ஷா பந்தன் பண்டிகையுடன் இணைந்த ஷ்ரவன் பூர்ணிமாவில் (ஆகஸ்ட் 03) இந்தாண்டு யாத்திரை நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.