ஹைதராபாத்: தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் திங்கள்கிழமை முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளியன்று மாநில அரசு தேர்வுகளை தள்ளி வைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் மாநில கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டமானது, முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் திங்களன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட உள்ளனர்.
மாநிலத்தில் இப்போதுள்ள சூழலில் தேர்வுகளை நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது என்றும், மாணவர்களுக்கு பள்ளி அக மதிப்பீட்டின்படி, தேர்ச்சிப் படி நிலைகள் வழனகப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் எதுவும் இன்றி தேர்ச்சி பெறுவதாக தெலங்கானா மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.