நாட்டில் அரசியல் வன்முறை செய்யும் ஒரே மாநிலம் மேற்குவங்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிகார் மற்றும் ஒடிசாவுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தொண்டர்களிடையே காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் பாஜக தனது செல்வாக்கை விரிவுபடுத்த நினைத்தாலும், அம்மாநிலத்தை பயங்கரவாத நிலையில் இருந்து விடுவிப்பதே எங்களது குறிக்கோள் என்று கூறினார்.
நாட்டில் அரசியல் வன்முறை செய்யும் ஒரே மாநிலம் மேற்கு வங்கம். ஏழை மக்களுக்கான மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மேற்குவங்க அரசு நிராகரித்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்த மம்தா பானர்ஜியை மக்கள் ஒரு அரசியல் அகதியாகவே பார்ப்பார்கள்.
உரி மற்றும் புல்வாமா தாக்குதலில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பயங்கரவாதத்துக்கு எதிராகவே நாங்கள் செயல்படுவதை காட்டுகிறது. பயங்கரவாதம் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டும்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் ஊழல்மிக்க ஒரு அரசை நடத்தி வருகிறது. உம்பன் புயலில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும், அதிலும் ஊழல் தொடர்ந்தது.
கரோனா ஊரடங்கு சமயத்தில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை 'கரோனா எக்ஸ்பிரஸ்' என்று கூறி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமானப்படுத்தினார் மம்தா பானர்ஜி. இந்த புலம்பெயர்ந்தோர் நீங்கள் அதிகாரத்திலிருந்து வெளியேறுவதை உறுதி செய்வார்கள் என்று பேசினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களை கைப்பற்றிய நிலையில் மேற்கு வங்கத்தில் 18 இடங்களை வென்றது. 2021 ஆம் ஆண்டு மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.