ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியனின் சுகூ பகுதியில் இன்று காலை, தீவிரவாதிகள் சுற்றித் திரிவதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை சுற்றிவளைத்து, அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த நடவடிக்கையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாள்களில் சோபியனில் நடைபெற்ற மூன்றாவது என்கவுண்டர் இதுவாகும். மேலும், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தளபதி உட்பட ஒன்பது ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.