ஊரடங்கு காரணமாக வேலை இழந்து தவிக்கும் சலவைத் தொழிலாளர்கள், தையல்காரர்கள், முடி திருத்துபவர்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 5 ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அன்றாடம் வருமானம் ஈட்டுவோர் வேலை இழந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான கடனுதவி மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள சலவைத் தொழிலாளிகள், தையல்காரர்கள், முடி திருத்துபவர்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ. 10,000 வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதன் மூலமாக 2.47 லட்சம் பேர் பயன்பெறுவர். இந்த நிவாரண உதவித்தொகை அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'ஜகன்னா சேதோடு' (Jagananna Chedhodu) என்ற சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு பல்வேறு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக கடந்த ஒரு வருடத்தில் இதுவரை 3.58 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். மொத்தமாக ரூ. 42,465 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.