திருமலை திருப்பதியில் மீண்டும் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கூட்டத்துடன் அழகோடு மிளிர்ந்து வருகிறது.
திருமலையில் கடந்த மார்ச்18ம் தேதி பக்தர்கள் கூட்டம் வழக்கம் போல் தரிசனம் செய்து கொண்டிருந்தது. அப்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த புனித யாத்திரை கூட்டத்தில் உள்ள ஒருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டது. அதனால் ஆந்திர அரசின் உத்தரவின்படி மலைப்பாதைகள் மூடப்பட்டது.
மார்ச் 19ம் தேதி திருமலையில் உள்ள பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து அவர்கள் திருப்பதிக்கு அனுப்பப்பட்டனர். அதன் பின்னர் ஜூன் 11ம் தேதியான வியாழக்கிழமை சாதாரண பக்தர்கள் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டனர். சுமார் 83 நாட்களுக்குப் பின் பக்தர்களின் நடமாட்டத்துடன் திருமலை அழகோடு காணப்பட்டது.
6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டாலும் மாடவீதிகளில், கோயில் முன் என கடந்த சில நாட்களாக வெறிச்சோடி போயிருந்த இடங்கள் பக்தர்கள் நடமாட்டத்தால் புத்துயிர் பெற்றுள்ளது. பக்தர்களை வரவேற்கும் விதம் வியாழக்கிழமை காலை சாரல் மழையும், திருமலையில் பெய்தது. சிறு தூறலில் நனைந்தபடி பக்தர்கள் சென்று ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர்.
இன்னும் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை சிறிது சிறிதாக உயர்ந்து மீண்டும் லட்சக் கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் இடமாகத் திருமலை விரைவில் மாறும் என அதிகாரிகள் மனதளவில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.