கோராக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் மாவட்டத்தில் இரட்டைக் கொலை வழக்கில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலைச் சம்பவத்தில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், புதன்கிழமை நள்ளிரவு, ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பார்கட்வா கிராமத்துக்கு அருகே மே 24-ம் தேதி கிருஷ்ணா (25), திவாகர் (23) என்ற இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரை சிறைக்கு அழைத்துச் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் ஒன்பதாம் வகுப்புப் படிப்பதாகவும், தனக்கு 17 வயது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், காவல்துறையினர், அவர் 20 வயதுக்கு மேல் இருப்பது போல் தெரிகிறார், அவர் வயது தொடர்பான சான்றிதழ்களை அளிக்க குடும்பத்தினர் தவறிவிட்டனர். அதனால் அவரை வழக்கமான சிறையிலேயே காவல்துறையினர் அடைத்தனர்.