மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், அமைச்சருமான அசோக் சவாண், அமைச்சர் ஜிதேந்தி அவாத் ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் குணமடைந்தனர்.
இந்நிலையில், மராத்வாடா பகுதியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் மாநில செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மும்பையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர்களது உதவியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், ஒரு சிலருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.