லக்னௌ: தர்மேந்திர பட்டேல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உதவி ஆசிரியர் தேர்வில் 95 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தவர். இவருக்குத்தான் இந்தியாவின் குடியரசுத் தலைவர் யார் என்று தெரியவில்லை.
பொது அறிவில் பூஜ்யமாக இருக்கும் தர்மேந்திர பட்டேலை கைது செய்திருக்கும் பிரயாக்ராஜ் காவல்துறையினர், உதவி ஆசிரியர் பணிக்கு நடைபெறும் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி மேலும் 9 பேரை கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் துவக்கக் கல்வித் துறையில் காலியாக இருந்த 69 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வில், பல ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு தகுதியில்லாத பலருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
முதற்கட்ட விசாரணையில், தேர்வில் முதலிடம் பிடித்த சிலரை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சில அடிப்படைக் கேள்விகளுக்குக் கூட இவர்கள் பதில் தெரியாமல் விழித்துள்ளனர். முதலிடம் பிடித்த தர்மேந்திர பட்டேல், இந்தியக் குடியரசுத் தலைவர் யார்? என்ற கேள்விக்கே பதில் தெரியாமல் விழித்துள்ளார். அதன் மூலம், உதவி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த முறைகேட்டில் முக்கியக் குற்றவாளி கே.எல். பட்டேல் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, பணிநியமன நடைமுறைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.