சென்னையிலிருந்து சேலம் மாவட்டம், சங்ககிரி மேற்குப் பகுதியில் உள்ள ஐசிஎல் காலனி பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சங்ககிரியை அடுத்த ஐசிஎல் காலனி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கர்ப்பிணிப் பெண் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். அவர் ஜூன் 2ம் தேதி செவ்வாய்க்கிழமை சங்ககிரி திரும்பியுள்ளார். சென்னையில் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சங்ககிரி வீட்டிற்குத் திரும்பிய அவரை சங்ககிரி சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு அவருக்கு மருத்துவத்துறையின் சார்பில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.