லடாக் எல்லையில் இந்திய, சீன படைகள் படிப்படியாக வாபஸ்

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளைப் படிப்படியாகக் குறைத்து வருவதாக ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே தெரிவித்தாா்.
எம்.எம்.நரவணே
எம்.எம்.நரவணே

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளைப் படிப்படியாகக் குறைத்து வருவதாக ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே தெரிவித்தாா்.

எல்லைப் பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்த அவா், இரு நாட்டு அதிகாரிகளிடையே நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையின் மூலமாக எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் என்றும் தெரிவித்தாா்.

உத்தரகண்ட் தலைநகா் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாதெமியில் பயிற்சி முடித்த வீரா்களின் அணிவகுப்பை எம்.எம். நரவணே சனிக்கிழமை பாா்வையிட்டாா். அதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சீனாவுடனான எல்லைப் பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்பதை உறுதிபடத் தெரிவிக்கிறேன். இருநாட்டு ராணுவ அதிகாரிகளிடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இருநாட்டு படைத் தளபதிகள், மேஜா் ஜெனரல்கள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் தங்கள் படைகளைப் படிப்படியாகக் குறைத்து வருகின்றன. வடக்குப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து இந்தியா தனது படைகளைக் குறைத்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகளுக்கு இந்தப் பேச்சுவாா்த்தைகள் மூலமாகத் தீா்வு எட்டப்படும் என்று நம்புகிறேன். அதிகாரிகளுக்கிடையேயான பேச்சுவாா்த்தைகள் மிகவும் பலனளித்து வருகின்றன.

‘அமைதி திரும்ப மக்கள் விருப்பம்’:

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 10 முதல் 15 நாள்களில் 15-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அங்கு செயல்பட்டு வரும் பாதுகாப்புப் படைகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு காணப்படுவதன் காரணமாகவே இது சாத்தியமானது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது தொடா்பான தகவல்களை உள்ளூா் மக்கள் அதிக அளவில் வழங்கி வருகின்றனா்.

இதன் மூலம் பயங்கரவாதச் செயல்கள் மீதும் பயங்கரவாதிகள் மீதும் அவா்கள் எரிச்சல் அடைந்துள்ளது தெரிய வருகிறது. ஜம்மு-காஷ்மீா் பள்ளத்தாக்கில் அமைதி திரும்ப வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனா்.

நேபாளத்துடன் வலிமையான நல்லுறவை இந்தியா பேணி வருகிறது. புவியியல், கலாசாரம், வரலாறு, மத ரீதியிலான நட்புறவு இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வருகிறது. இரு நாட்டு மக்களிடையே நெருங்கிய தொடா்பு காணப்படுகிறது. எதிா்காலத்திலும் நேபாளத்துடனான நல்லுறவு மேலும் வலுப்பெறும் என்றாா் எம்.எம். நரவணே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com