தில்லி: தலைநகர் தில்லியில் கரோனா தொற்றின் வீரியம் அதிகரித்துக் காணப்படும் வேளையில், இதுதொடர்பாக விவாதிக்க திங்களன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் தலைநகரான தில்லியில் கரோனா தொற்றின் வீரியம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்து விட்டது.
இதையடுத்து தில்லியில் உள்துறை அமைச்சகத்தில் ஞாயிறன்று நடைபெற்ற இரண்டு கூட்டங்களில் முதலாவதில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உள்ளிட்டோர் பங்கேற்று அமித் ஷாவுடன் விவாதித்தனர்.
இரண்டாவது கூட்டத்தில் தில்லி மேயர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் தில்லியில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.தில்லியில் தடுக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களில் விரைவில் இந்தப் பணிகள் துவங்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் கரோனா நிலவரம் குறித்து விவாதிக்க திங்களன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். தில்லியில் காலை 11 மணியளவில் இந்த கூட்டமானது விடியோ கான்பெரன்சிங் முறையில் நடைபெறும் என்று தெரிகிறது.