இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 50.60 சதவீதமாக இருப்பதாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட பத்திரிகை செய்தி:
கடந்த 24 மணி நேரத்தில் 8,049 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 50 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 1,62,378 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், குணமடைவோர் விகிதம் 50.60 சதவீதமாக உள்ளது. இது நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் குணமடைந்துள்ளதை வெளிப்படுத்துகிறது.
தக்க நேரத்தில் பாதித்தவர்களைக் கண்டறிவதும், தகுந்த சிகிச்சையளித்ததுமே இதற்கு உதவியிருக்கிறது. மொத்தம் 1,49,348 பேர் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு ஆய்வகங்கள் 646 மற்றும் தனியார் ஆய்வகங்கள் 247 என மொத்தம் 893 ஆய்வகங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,51,432 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 56,58,614 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.