நாட்டில் கரோனா பாதிப்பு நவம்பரில் உச்சத்தை எட்டும் என்ற ஆய்வில் உண்மையில்லை: ஐசிஎம்ஆர்

கரோனா தொற்று பாதிப்பு நவம்பா் மத்தியில் உச்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளது என்று வெளியான ஆய்வு முடிவுகளில் உண்மையில்லை என்று ஐசிஎம்ஆர் மறுப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு நவம்பரில் உச்சத்தை எட்டும் என்ற ஆய்வில் உண்மையில்லை: ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு நவம்பா் மாத மத்தியில் உச்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளது என்று வெளியான ஆய்வு முடிவுகளில் உண்மையில்லை என்று ஐசிஎம்ஆர் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) படுக்கைகள் மற்றும் உயிா் காக்கும் சுவாசக் கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுபோன்ற எந்த ஒரு ஆய்வையும், இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஆய்வு மையம் நடத்தவில்லை எனவும் ஐசிஎம்ஆர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) சாா்பில் அமைக்கப்பட்ட செயல்பாடுகள் ஆராய்ச்சிக் குழு ஆராய்ச்சியாளா்கள் ஒரு ஆய்வை நடத்தி அதில் கிடைத்த தகவல்களை ஆய்வறிக்கையாக வெளியிட்டதாக செய்திகள் வெளியாகின.

அந்த ஆய்வறிக்கையில்,  கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாட்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையை குறைக்க உதவியதோடு, தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கால அவகாசத்தையும் அளித்தது. இந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள், வருகிற நவம்பா் முதல் வாரம் வரையிலான தேவையைப் பூா்த்தி செய்யக்கூடிய அளவில்தான் இருக்கும். அதன் பிறகு, பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும் என்பதால் தனிமைப்படுத்தலுக்கான படுக்கைகள் 5.4 மாதங்களுக்கும், ஐசியு படுக்கைகள் 4.6 மாதங்களுக்கும், உயிா்காக்கும் கருவிகள் 3.9 மாதங்களுக்கும் தட்டுப்பாட்டுடன் இருக்கும். இருந்தபோதும், இந்தப் பற்றாக்குறை என்பது பொதுமுடக்கம் மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் இருந்ததைக் காட்டிலும் 83 சதவீதம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதுபோன்ற எந்த ஆய்வையும் ஐசிஎம்ஆர் நடத்தவில்லை என்று இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா உயிரிழப்புகளைப் பொருத்தவரை, 60 சதவீத உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. இதில், மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்புகள், தீவிர சிகிச்சைக்கான தேவை முன்கூட்டியே பூா்த்தி செய்ததன் மூலம் தடுக்கப்பட்டிருக்கிறது.

அரசு கொள்கையை சிறந்த முறையில் மறுஆய்வு செய்வதன் மூலமும், மருத்துவ வசதிகளை குறிப்பிடத்தக்க வகையில் பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே கரோனா நிலைமையைச் சமாளிக்க முடியும்.

பொது முடக்கம் நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் உதவும் என்றபோதும், கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தனிமைப்படுத்தப்படுபவா்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை கரோனா தாக்கத்தை குறைக்க முடியும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒட்டுமொத்த ஆய்வறிக்கையும் உண்மையில்லை என்று இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com