இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 51.08 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட பத்திரிகை செய்தி:
"கடந்த 24 மணி நேரத்தில், 7,419 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,69,797 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 51.08 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 1,53,106 பேர் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் அரசு ஆய்வகங்களின் எண்ணிக்கை 653 ஆகவும், தனியார் ஆய்வகங்களின் எண்ணிக்கை 248 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. மொத்தம் 901 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 1,15,519 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 57,74,133 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன."
இந்தியாவில் மொத்தம் 3,32,424 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,520 பேர் பலியாகியுள்ளனர்.