கரோனா பொது முடக்கத்துக்கு மத்தியில், சிறப்பு விமானம் மூலம் பிரிட்டனிலிருந்து கேரளத்துக்கு அழைத்து வரப்பட்ட ஐடி ஊழியர் திங்கள்கிழமை மரணமடைந்தார்.
அவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார், அதன் காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளார்.
பிரிட்டனில் ஐடி ஊழியராகப் பணிபுரிந்து வந்தவர் பிரசாத் தாஸ்(37). இவரை கேரளத்துக்கு அனுப்பி வைப்பதற்கான கோரிக்கையை நாட்டிங்கம் நகரின் மேயர் டாம் ஆதித்யா முன்வைத்தார். ஆனால், கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக அந்த சமயம் பொது முடக்கம் அமலில் இருந்தது. வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் ஆகியோரது முயற்சியால் இரண்டே நாள்களில் பல்வேறு அமைச்சகங்களின் அனுமதி பெற்று, சிறப்பு விமானம் மூலம் அவர் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டார்.
இதன்பிறகு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஒரு மாதத்துக்கு முன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, புற்றுநோயின் 4-ஆம் கட்டத்தை எட்டிய அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், திங்கள்கிழமை அவர் மரணமடைந்தார்.
புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளதால், அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படவில்லை.