கிருஷ்ணா: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஆம்புலன்சில் இருந்து ஒரு லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக நந்திகாமா சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமணா கூறியதாவது:
கிருஷ்ணா மாவட்டம் வீருலபாடு காவல்துறையினர் மற்றும் மதுக்கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு, தெலங்கானாவில் இருந்து ஆந்திராவுக்கு மது கடத்தப்படுவதாக செவ்வாய் காலை தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் பெத்தாபுரம் சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடந்து கொண்டிருந்தது. அப்போது தெலங்கானாவின் கம்மம் மாவட்டம் மதிராவில் இருந்து, குண்டூரில் உள்ள சிலகளுரி பேட்டா என்ற இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதனை நிறுத்தி சோதனை செய்தபோது ஒரு லிட்டர் அளவுகொண்ட 107 மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் ஒரு பாட்டிலின் மதிப்பு ரூ.990 ; எனவே மொத்த பாட்டில்களின் மதிப்பு ரூ. 1,05,930 ஆகும்.
இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்ட ஆம்புலன்சும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.