புது தில்லி: நாடு முழுவதும் பொது முடக்க தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் செவ்வாய்க்கிழமையும் (ஜூன் 16) புதன்கிழமையும் (ஜூன் 17) பிரதமர் நரேந்திர மோடி காணொலி முறையில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
பஞ்சாப், கேரளம், கோவா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோருடன் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை ஆலோசிக்கவுள்ளார்.
தமிழகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தில்லி, கர்நாடகம், குஜராத், பிகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களின் முதல்வர்களுடன் அவர் புதன்கிழமை ஆலோசனை நடத்துகிறார். இந்த மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. நாடு முழுவதும் பொதுமக்களுக்கும், தொழில்நிறுவனங்களுக்கும் முதல்கட்டமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுபோன்ற சூழலில், முதல்வர்களுடன் பிரதமர் நடத்தவிருக்கும் ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.