லடாக் விவகாரத்தில் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரதமர் மோடி ஏன் தயங்குகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரி மற்றும் இரு வீரர்கள் என 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இரு நாடுகளும் படைகளைத் திரும்பப் பெறும் சூழ்நிலையில் ஏற்பட்ட இந்த மோதலினால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் சில மணி நேரங்களுக்கு முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை இட்டுள்ளார். அதில், லடாக் விவகாரத்தில் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரதமர் மோடி ஏன் தயங்குகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி இரட்டை முகம் கொண்ட அரசியல் செய்கிறார். சீனப் படைகள் எல்லையைக் கடக்கும்போதே பிரதமர் மோடி ஏன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக, 'லடாக்கில் நம் இடத்தை சீனப்படைகள் ஆக்கிரமிக்கின்றன. ஆனால், பிரதமர் அமைதியாக இருக்கிறார். சீனப்படைகள் இந்திய எல்லையை ஆக்ரமித்துள்ளதா? என அரசு தெளிவுபடுத்த வேண்டும்' என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.