நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில முதல்வர்களுடன் நேற்றும், இன்றும் காணொலி மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
நேற்று கரோனா பரவல் குறைவாக உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி இன்று பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதில் அவர் பேசியதாவது:
நாட்டில் தற்போது சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கையை விட கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தற்போது, நாடு முழுவதும் மிகக் குறைந்த நோயாளிகளுக்கே வென்டிலேட்டர் மற்றும் ஐ.சி.யூ வசதி தேவைப்படுகிறது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கரோனாவை எதிர்த்துப் போராடவும் அதன் பரவலைக் கட்டுப்படுத்தவும் முடிந்தது.
3 மாதங்களுக்கு முன்பு, உலகம் முழுவதும் பிபிஇ எனும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பரிசோதனைக் கருவிகளின் பற்றாக்குறை இருந்தது. இந்தியாவிலும் மிகக் குறைவாகவே இருந்தது. ஏனெனில் நாம் இறக்குமதியை முழுமையாக நம்பியிருந்தோம். ஆனால் இன்று, 1 கோடிக்கும் மேற்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், என்95 முகக்கவசங்கள் நம்மிடம் உள்ளன.
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சுகாதார உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு கரோனா நோயாளிக்கும் சரியான சிகிச்சை கிடைக்கும் போது இது நடக்கும். இதற்காக பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பரிசோதனை மூலமாக பாதிக்கப்பட்ட நபரை கண்டறிந்து தனிமைப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.