இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்தது பற்றியும் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது பற்றியும் பிரதமர் நாட்டு மக்களிடம் உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் இன்று (புதன்கிழமை) பேசியதாவது:
"20 ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகம் நாட்டின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. வீரமரணமடைந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மனதின் ஆழத்திலிருந்து அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களது குடும்பத்தினர் இந்தத் துயரத்தை எதிர்கொள்வதற்கான வலிமையைப் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நாடே இன்று கொந்தளிப்பில் இருக்கும் நிலையில், இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்தது பற்றியும் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது பற்றியும் பிரதமர் நாட்டு மக்களிடம் உண்மையைத் தெரிவிக்க வேண்டும். அங்கு இன்றைய நிலவரம் என்ன?
நமது ராணுவ வீரர்கள், அதிகாரிகள் யாரேனும் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் காணாமல் போயுள்ளனரா? எத்தனை வீரர்கள்/அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்? எந்தெந்தப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது? இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள அரசின் கொள்கை என்ன? இந்த நெருக்கடியான நிலையில், இந்திய ராணுவத்துடனும், ராணுவ வீரர்களுடனும், அவர்களது குடும்பத்தினருடன், அரசுடனும் காங்கிரஸ் துணை நிற்கிறது."